Friday, July 01, 2005

அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து

அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்கள்
சுப்பிரமணியன் ரமேஷ்

அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்களை வாசித்தேன். இது குறித்து சற்று விரிவாகப் பேசுவது சிங்கப்பூர் இலக்கியவாதிகள் எதிர் நோக்கும் பிரச்சனையைப் புரிந்து கொள்ள உதவும்.

சிங்கப்பூர் இலக்கியம் குறித்து பேசுபவர்கள் அவர்கள் எந்தெந்த படைப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டார்கள். புறங்கையால் நிராகரிப்பிற்கான காரணங்கள் என்னென்ன என்பதை குறிப்பிட்டால் ஒரு வேளை அது எங்களுக்கு உதவலாம். வெறும் அபிப்பிராயங்கள் எந்தவிதத்தில் உதவக்கூடும்?
@ @ @ @
முதலாவதாக சிங்கப்பூர், மலேசிய இலக்கியங்கள் ஒன்று போலத் தோன்றினாலும் சிலவிதங்களில் வேறுபடுபவை.

மலேசியாவில் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள், அரசியல் கலாச்சார சூழல்களில் புறக்கணிப்புக்குள்ளாவதாக ரே.கார்த்திகேசு போன்ற மலேசிய எழுத்தாளர்கள் கூறுகின்றனர்.

மாறாக சிங்கப்பூர் அரசு இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும் அக்கரையும் கொண்டிருக்க, மக்கள் மெத்தனம் காட்டும் சூழல் சிங்கப்பூரிலிருக்கிறது.
இரு வருடங்களுக்கு ஒருமுறை 'நேஷனல் ஆர்ட் கவுன்ஸிலின்' மூலமாக தங்கமுனைப் போட்டியில் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் சிறந்த சிறுகதை, கவிதைகளுக்கு முதல் பரிசாக s$ 10,000 வெள்ளி ( இந்திய பணமதிப்பில் 2,60,000 ரூபாய்) வழங்குகிறது. ஆண்டுதோறும் தமிழில் வெளியிடப்படும் புத்தகங்களில் மேலான ஆக்கத்திற்கு s$10,000
பரிசளிக்கிறது. இது தவிர புதிதாக நூல்களை வெளியிடவும் மான்யம் வழங்குகிறது. இதுவரையான தேர்வுகள் நேர்மையாகவும், நாணயமாகவும் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.
உலகத் தரத்திலான சிறந்த நூலகங்கள் நாடெங்கும் பரவியுள்ளன. தமிழில் சமீபத்திய நூல்களைக் கூட இங்கே காணலாம். இலக்கியம் குறித்த கூட்டங்களை நூலகங்கள் ஏற்பாடு செய்யவும், வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்கிறது. (சமீபத்தில் வந்தவர்கள், காலச்சுவடு கண்ணன், மாலன், வெங்கடேஷ், சிபிச்செல்வன், வாஸந்தி, சாருநிவேதா, அஜீவன், ரே.கார்த்திகேசு)

நூலகமும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து கதையும் காட்சியும் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றன.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் அவ்வப்போது சிறுகதைப் போட்டிகளும், நாவல் போட்டிகளும் நடத்துவதுடன், விழாக்களையும், பட்டி மன்றங்களையும் நிகழ்த்துகிறது. இவையன்றி கடற்கரைக் கவியரங்கம், இலக்கிய வட்டம், மாதவி மன்றம், வாசகர் வட்டம், சிங்கை முரசு, என பல்வேறு தமிழ் ஆர்வல அமைப்புகள் தமிழ் இலக்கியம் பேசுகின்றன.
@ @ @ @

இருப்பினும் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைக் காணவில்லை என்பது உண்மையே!
எனக்குத் தோன்றிய காரணங்களை பதிவு செய்கிறேன்.
* சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் தமிழ் நாட்டின் இலக்கியப் போக்கை பின்பற்றும் இயக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.

-பண்டிதர்கள்/திராவிட இயக்க இலக்கியம் சார்ந்த குழுக்கள்.
-வானம்பாடி இயக்கத்தை ஒத்த குழுக்கள்
-நவீன தமிழ் இலக்கிய ர்வம் கொண்ட குழுக்கள்.

இப்படி சூழலும்கூட தமிழ் நாட்டின் சூழலாகவும், ஒருவரை ஒருவர் நிராகரிப்பதும் கூட தமிழ் சூழலைப் போன்றே இருக்கிறது. (இன்னமும் தௌ¤வாகச் சொன்னால் தமிழில் க.நா.சு விமர்ச்சன கால கட்டத்தை நினைவூட்டும் வகையில்) ஆனால் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், ஒரு தமிழ்நாட்டு தமிழனின் பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் வேறானது. (உதாரணத்திற்கு: சாதியோ, மதமோ, இனமோ பெரிதாகப் பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாமல் இங்கே திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை ஒருவர் தீர்மானிக்கவும், எடுக்கவும், வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் இயலும். ஊழல், அரசியல் அராஜகம், கட்டாயக் கடையடைப்புகள் இன்றி ஒருவர் நேர்மையாகவும், கண்ணியமாகவும் வியாபாரம் செய்ய இயலும்.)
சிங்கப்பூரர்கள் தாங்கள் யார் என்பதை அறியும் தௌ¤விலிருந்தே, சிறப்பான இலக்கியங்கள் தோன்ற முடியும்.

* பரப்பளவில் மிகச் சிறிய குட்டித் தீவு சிங்கப்பூர், எந்த விதமான இயற்கை வளமோ, கனிம வளங்களோ அற்ற நாடு. இத்தகைய நாடு இன்று அற்புத பொருளாதார வளம் கண்டு முதலாம் உலக நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருப்பதற்கு ஊழலற்ற அரசு, தீர்க தரிசனம் கொண்ட திட்டங்கள் அடுத்த முக்கிய காரணம் மக்களின் கடுமையான உழைப்பு. இன்றைய கடினமான சந்தை சூழலில் இப்போதைய வசதியையும், வாழ்க்கையையும் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைத்தே தீர வேண்டியுள்ளது. இலக்கியம் படிக்க நேரமற்ற வாழ்கை முறையும், சூழலும் மக்களுக்கு. மற்ற வளர்ந்த நாடுகளின் எழுத்தாளர்களைப் போல எழுத்தையே பணியாக கொள்ள முடியாதது மட்டுமல்லாமல் வேறு வேலைகளில் கடுமையாக உழைக்கவும் நேர்வதே சிங்கை எழுத்தாளனின் நிலை.( இது நியாயப் படுத்த அல்ல.) சிங்கப்பூர் எழுத்தாளர்களிலேயே தமிழிலக்கியத்தின் நவீன போக்குகள் குறித்தும், உலக இலக்கிய போக்குகள் குறித்தும் விரிவான வாசிப்பு கொண்டவர்கள் குறைவுதான்.

* சிங்கப்பூரில் சீன, மலாய், இந்திய, ங்கில இனங்கள் வாழ்கின்றன. இந்த இனங்களுக்கிடையில் இன்னமும் அதிகமான இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்களும், இவர்களின் படைப்புகள் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப் படவும் வேண்டியது முக்கிய தேவை. இத்தகைய முயற்சிகள் சிங்கப்பூரின் தனி அடையாளத்தை செழுமை படுத்தும். கோபால் பரதம் போன்ற ஆங்கிலத்தில் எழுதிய/எழுதும் தமிழர்கள் குறித்தும் விரிவாக தமிழில் பதிவு செய்யப்படவில்லை.
* சிங்கப்பூரிலிருந்து இப்போது நிறைய பேர் எழுதுகிறார்கள், ஆனால் அவர்களின் படைப்புகளை வெளியிட ஏற்ற களமில்லை. தமிழ் முரசு என்ற தமிழ் நாளிதழை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ஒரு செய்தித்தாள் நடைமுறையில் இலக்கியத்திற்கு எவ்வளவு இடம் ஒதுக்க முடியும்? பரிசோதனை முயற்சிகளுக்கும், வித்யாசமான நவீன எழுத்துகளுக்கும், விமர்ச்சிக்கவும், விவாதிக்கவும், நூல் அறிமுகங்களுக்கும், உலக இலக்கிய வகைகளின் மாதிரிகளை வெளியிடவும், மொழிபெயர்ப்புகளுக்கும் இப்போதைக்கு இலக்கிய தமிழ் இதழ்களோ, சிறுபத்திரிக்கைகளோ இல்லாதது பெரும் குறை.( வலை இதழ்களும், வலைக்குழுக்களும், வலைப்பூக்களும் இதற்கு ஒரு நம்பிக்கைத் தரும் மாற்று. காலச்சுவடு, உயிர்மை, அமுதசுரபி போன்ற தீவிர இலக்கிய இதழ்களுக்கு எழுத முற்படுவதும் ஒரு நல்ல ஆரம்பமே)
@ @ @ @
மடிகணினியில் எழுதி சேமித்து விட்டு என்னெதிரே அமர்ந்திருக்கும் சிங்கப்பூர் தமிழ் இளைஞனைப் பார்க்கிறேன், சரியான முறையில் இப்போதைய தலைமுறை செயல்பட்டால் அவன் தலைமுறையில் தமிழிலக்கியத்தின் எல்லைகள் மேலும் விசாலப்படும்.
ஓ.பி கால்சராயும், பிலபாங் கேஷ§வல் சட்டையும், நைக் ஸ்போர்ட்ஸ் காலணிகளை சாக்ஸ் இன்றி அணிந்திருக்கிறான், இடது காதில் சிறிய கடுக்கன், ஒட்ட வெட்டப்பட்ட தலையில் ஏறி அமர்ந்திருக்கிறது ஓகிளியின் குளிர்கண்ணாடி, முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும் பையில் கண்டிப்பாக சமீபத்திய கணினி விளையாட்டுக்கான வட்டோ, ஸ்டார்வார்ஸ் படமோ இருக்கும், சாம்ஸோனைட் பையின் ஜிப்பின் திறந்த இடுக்கிலிருந்து வெண்ணிர கொடியென ஏறி அவன் காதுகளை அடைத்திருக்கிறது ப்பிள் ஐ-பாட்'டின் தொப்புள் கொடி..தொடர்ச்சியாய் சோனி-எரிக்சனின் கே700ஐ யில் அவன் விரல்கள் லாவகமான வேகத்தில் நர்த்தனமிடுகின்றன, குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கிறான் சந்திரமுகி படம் அல்லது எம்.டி.வி அல்லது ரொனால்டோ குறித்ததாய் இருக்கலாம், சென்னிற தலைச்சாயம் பூசிய தன் வகுப்புத்தோழிக்கோ அல்லது 'கூட்டாளிக்கோ'. அடிக்கடி கைத்தொலைப் பேசியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான். அபரிமித ற்றலும், வேகமும், பொறுமையின்மையும் தென்படுகிறது. கோவலனுக்கு ஜீன்ஸ§ம், கண்ணகிக்கு சுடிதாரும் போடுவதை விடுத்து சிங்கப்பூரின் படைப்புகள் அவனது உலகத்திற்குள் சென்று அவனைத் தொடாத வரை, அவனும் எங்கள் இலக்கியங்களைத் தொடப்போவதில்லை.
@ @ @ @
சுப்பிரமணியன் ரமேஷ்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: