Wednesday, May 25, 2005

வாசிப்போம்! சிங்கப்பூர் (Read! Singapore)

சிங்கையில் புத்தக வாசிப்பை அதிகரிக்க வாசிப்போம்! சிங்கப்பூர் (Read! Singapore) என்ற இயக்கம் நேற்று கல்வி அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களால் அதிகாரபூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது.

தேசிய நூலக வாரியம் மேற்கொண்ட ஆய்வொன்றில், சுமார் 52 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் புத்தகம் படிக்க நேரமில்லை என்று தெரிவித்ததன் உடனடி விளைவுதான் இந்த "வாசிப்போம்! சிங்கப்பூர்" இயக்கம்.

வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது மட்டுமல்லாமல் வாசிப்பதில் உள்ள இன்பத்தையும் உணர்த்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்
முனைவர். வரப்பிரசாத்
வாசிப்போம்! சிங்கப்ப்பூர் - தலைவர்
தலைமை நிர்வாக அதிகாரி - தேசிய நூலக வாரியம்

வாசிப்போம்! சிங்கப்பூர் தேசிய அளவில் நடத்தப்படும் இயக்கமாகும். பத்துவார காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 புத்தகங்களில் ஒன்றை வாசித்து இன்புறலாம். பின்னர் அதைப்பற்றி நண்பர்கள், குடும்பத்தினருடன் விவாதிக்கலாம்.

தமிழ் பிரிவில் பிரபல எழுத்தாளார் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்", திருமதி. சிவசங்கரியின் "47 நாட்கள்" மற்றும் மறைந்த உள்ளூர் எழுத்தாளர்/பேராசிரியர்/கணிஞர் திரு. நா. கோவிந்தசாமியின் "தேடி" ஆகிய மூன்று புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர பல நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:

1) தொடர் வாசிப்பு (READ! Singapore Marathon):
தீவு முழுவதும் இம்மாதம் 28ம்தேதி பிற்பகல் 12 மணிக்குத்தொடங்கி மறுநாள் பிற்பகல் 12 மணி வரை தொடர் வாசிப்பு.

2) எழுத்தாளார்களை சந்தியுங்கள்:
பிரபல எழுத்தாளர்களை சந்தித்து அளாவளாவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழில் திரு. ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நேரம்: 09 ஜீலை 2005 - சனிக்கிழமை - காலை 10.00 முதல் 12.30 வரை
இடம்: உட்லேண்ட்ஸ் வட்டார நூலகம்.

இதுதவிர இன்னும் பல நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாசிப்போம்! சிங்கப்பூர் - மேல் விபரங்களுக்கு...

சிங்கை நூலகங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்கள் இருந்தும், இரவல் வாங்குவது வெகு குறைவாக இருக்கிறது. இதுதொடர்பில், வாசிப்பை அதிகரிக்க சிங்கை கலை, இலக்கிய குழு (சிங்கைமுரசு) எப்படி உதவலாம் என்றும் கடந்த வாரயிறுதியில் நடந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டு,
வாசகர் வட்டம் போன்ற தொடர் சந்திப்பு, கலந்துரையாடல்கள் நிகழ்ச்சி மூலம் புத்தக வாசிப்பை, ஈடுபாட்டை அதிகரிக்கலாம் என்ற முடிவு செய்து, மேல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மற்றவிபரங்கள் விரைவில்...
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: