Monday, November 21, 2005

என்றும் தமிழ்வாழ...

தமிழை வாழும்மொழியாக தொடர சிஙகையில் தொடர்முயற்சி நடந்துவருகிறது. அதன் ஒரு முயற்சியாக கல்வி அமைச்சு அமைத்திருந்த பாடத்திட்ட மறுஆய்வுக்குழுவின் அறிக்கை சென்றவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் அடுத்த ஆண்டு முதல் தமிழ்ப் பாட போதனையில் மாபெரும் மாற்றம் அமலாகிறது. தமிழ்ப் பாட போதனை இனிமேல் பேச்சுத் தமிழில் இருக்கும். தமிழ் மொழியில் மாணவருக்கு ஆயுள் முழுதும் நாட்டம் ஏற்படுமாறு செய்யப் பேச்சுத் தமிழில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் எனக் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்தார்.

மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் பயில்வதில் இருக்கும் சிரமங்களைப் போக்குவதற்காகவும் தமிழ்ப் பேச்சுப் புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிறிய சமூகமாய் உள்ள தமிழ்ச்சமூகத்தில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ் மொழியை வீட்டிலும் வெளியிலும் அடிக்கடி தொடர்ந்து பேச வேண்டும். ஆங்கிலம் பேசும் சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ் பேசுகின்ற சூழலை அதிக அளவில் நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் வருங்காலத்திலும் வாழும் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.

வகுப்பறைக்கு வெளியேயும் தமிழ் தழைக்க வழி

தமிழ் வாழும் மொழியாக இருக்கவேண்டுமானால் பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் அந்த மொழி வாழ வேண்டும். இது தான் நமக்குள்ள சவால் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முக ரத்னம் தெரிவித்தார்.

இந்தச் சவாலைச் சமாளிக்க இளையர் தங்களுக்குப் பிடித்தவற்றைச் சொந்தமாகச் செய்வதற் கான வாய்ப்புவசதிகளை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார் அமைச்சர்.
இளையர்கள் தங்கள் சொந்த பாணியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அவர் களுக்கு முன் பிறந்தவர்கள் விரும்பும் பாணியில் இளையர்கள் செயல்படும் சூழல் இருக்கக் கூடாது. இளையர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். தகவல் சாதனங்களில் தங்களின் சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் தாங்கள் விரும்பும் பாணியில் வெளியிட அவர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

நம்முடைய இளையர்கள் பல தரப்பட்ட நடவடிக்கைகளிலும் நேரங்களிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்த வாய்ப்புகளை வழங்கும் பொறுப்பைக் குடும்பங்கள், பொதுத்தகவல் சாதனங்கள், சமூக அமைப்புகள் எல்லாம் பள்ளிக் கூடங்களுடன் சேர்ந்து நிறைவேற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பள்ளிக்கூடத்தை விட்டுச் செல்லும் இளையர்கள் தங்களுடன் தமிழைக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் சிறியதாக இருப்பதால் தமிழ் மொழியை வாழும் மொழியாகக் கட்டிக் காக்கும் பணி சீன, மலாய்ச் சமூகத்தைவிட தமிழ் சமூகத்துக்குச் சிரமமிக்கது என் பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழ்ச் சமூகம் மிகவும் ஒற்றுமையாக இந்தக் காரியத்தைச் சாதிக்கவேண்டும் என்று சொன்னார்.

தமிழ்ச் சமூகம் பள்ளிக்கூடங்களுடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பாடத் திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க உதவுவதற்காகக் கல்வி அமைச்சு விரைவில் ஒரு குழுவை அமைக்கும் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று அறிவித்தார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகத் தமிழ்ச் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ள தாகவும் பரிந்துரைகள் தொடர்பில் பள்ளிக்கூடங்களுக்கும் மாணவருக்கும் எப்படி எப்படி எல்லாம் உதவலாம் என்பதைத் தெரிந்து கொள்ள சமூக அமைப்புகள் விரும்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இளையர்களை இணைத்துக்கொண்டு தமிழ்மொழி நிகழ்ச்சிகளை ஒளியேற்றுக!

இளையர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும், பகிர்ந்துகொள்ளும் தமிழ்முரசு செய்தித்தாளின் இளையர்முரசு பிற தகவல் சாதனங்களுக்கு நல்லதொரு வழிகாட்டி என்று கல்வி அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்னம் பாராட்டியிருக்கிறார். தமிழ் மொழியை வாழும் மொழியாக தொடர்ந்து கட்டிக் காப்பதில் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்ட அமைச்சர், செய்திகளைத் தருவது மட்டுமின்றி, இளையர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். அத்தகைய வாய்ப்பை தமிழ் முரசின் இளையர் முரசு, மாணவர் முரசு ஆகியவை வழங்குவதாகவும் தொலைக்காட்சியும் இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை வழங்கலாம் என்றும் அமைச்சர் எடுத்துக் கூறினார். அத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே பேச்சுத் திறனை வளர்ப்பதாக அமையலாம் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்ப் பாடத்திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை மேலும் அறிய, கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து...

இது தொடர்பான விரிவான தகவல்களையும், பலரின் கருத்துக்களையும் கடந்த சில நாட்களாக தமிழ்முரசு வெளியிட்டிருக்கிறது அவற்றைப்படிக்க....

தகவல்களுக்கு நன்றி: தமிழ்முரசு, ஒலி மற்றும் கல்வி அமைச்சு.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: