Tuesday, October 10, 2006

நூல் அறிமுகம்

வாங்கிப் படியுங்கள்


-------- புஷ்பா தங்கதுரை


ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்
வெளியீடு: மதி நிலையம்
சென்னை- 600 017
விலை- ரூ.76
பக்கங்கள் -173






சிங்கப்பூரின் ·புனான் செண்டரில் ஆறாவது மாடியில் 'சேலஞ்சர்' கம்ப்யூட்டர் நிறுவனம். ஒவ்வொரு முறை போகும்போதும் சேபஞ்சரில் நிறைய மணி நேரம் செலவழிப்பேன். கால்கள் கெஞ்சும். ஒரு சமயம், ஒரு பகுதியை விட்டு இன்னொரு பகுதி போகிறேன் என்று நினைத்து வாசலைக் கடந்தபோது அபாய மணியடித்து உடனே திரும்பினேன். கவுண்டரிலிருந்த சீனப் பெண்மணி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். எதுவும் சொல்லவில்லை. நான் வாங்கிக் கொண்ட சாமான்களுக்குப் பணம் கொடுக்காமல் போகிறேன் என்று அந்த அபாய மணியடிக்கிறது.




இப்போதும் நான் சேலஞ்சர் போகும்போதெல்லாம், என்னைப் போல் யாராவது ஒருவர் வெளியில் போவதும், அபாயம் அலறுவதும், மன்னிப்புடன் அவர் உள்ளே திரும்புவதும், பலமுறை பார்த்திருக்கிறேன்.



இது ஒரு ரக அனுபவம். இது போன்ற பல ரக அனுபவங்களை சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ஜெயந்தி சங்கர் வாயிலாகப் படிக்கும் போது அருமையான சுவை ஏற்படுகிறது. புதுமை அனுபவமே ஒரு புதுமையான கதையாக மாறும். ஜெயந்தி சங்கர் அவரது புதுமையான அனுபவங்களை அழகாக உள்ளைத்தைத் தொடும்படி கதைகளாக வடித்துள்ளார். தாமே விலகி நின்று தம்மையே மூன்றாம் நபராக ஒரு ரசனையோடு பார்த்து எழுதுவது நல்ல கலை. அதுவும் ஒளிவு மறைவின்றி அப்படியே தத்ரூபமாக வர்ணிப்பது படிப்பவர் மனங்களை ஈர்த்து விடும். இந்த நீதியில் 'நாலேகால் டாலர்' நெகடிவ் சிங்கப்பூருக்கு ஓர் எடுத்துக் காட்டு. பதைபதைப்புடன் படிக்கிறோம்.



அதைப்போலவே 'ஈரம்' என்ற கதை ! ஈரத்தில் லிப்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி அவருக்கே முழுவதுமாகத் தெரியாமல் இருக்க, அதனால் ஏற்படும் கடின சோதனைகள் மற்றொரு நெகடிவ் சிங்கப்பூர். சம்பவங்களைச் சுற்றி எழுந்துள்ள கதைகளைத் தவிர, 'தையல்', 'நுடம்', 'திரிசங்கு', 'அப்பா' போன்ற குடும்பரீதியான கதைகள் சிங்கப்பூர் பின்னணியில் ஆசிரியையின் மனப்பின்னல்களுடன் வரும் அழுத்தமான சித்திரங்கள். 'எம்.ஸீ தருகிறேன்' என்று சீன டாக்டர் கிண்டலாகச் சொல்ல அதையும் கேட்கிற அந்தக் குடும்பப் பெண்ணுக்கு அது எத்தனை துன்ப உணர்வைக் கொடுக்கிறது, 'எம்.ஸீ' கதையில்.



'மிருகன்' என்ற கதையில் சட்டம்'ஒழுங்கு உள்ள அந்த நாட்டிலும் அப்படி நடக்கிறதே என்று நம்மை நினைக்க வைக்கிறது.
முதலில் தனித் தனிக் கதைகளாகப் படிக்கப் போக, பிறகு கதைகளின் சுவையிலும் அமைப்பிலும் நடையிலும் கவரப்பட்டு எல்லாக்கதைகளையும் படித்து முடித்தேன்.



'பசி ஆறுதல்', 'காடி', 'ஏர்கான்' என்ற சிங்கப்பூர் வார்த்தைகள் மனதில் ஒருவகை உவகை கொடுக்கின்றன. நம் வீட்டு சன்னலிலிருந்து அண்டை வீட்டில் நடப்பதையெல்லாம் அனுதாபத்துடன் கவனிப்பது போல் அவ்வளவு தத்ரூபமாக அமைந்துள்ளன. இதில் வரும் குடும்பக் கதைகள் எளிய சொற்கள், மிகத் துல்லியமாகக் காட்சிகளை வர்ணிக்க ஜெயந்தி சங்கரின் pscheல் புகுந்து வெளிவருவது போல் ஓர் நூதன அனுபவம் கொடுக்கிறது. இந்தக் கதைத் தொகுதி 'ஓர் உணர்வுக் களஞ்சியம்'



----------- புஷ்பா தங்கதுரை


இலக்கியப்பீடம் /செப்டம்பர் 2006
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

1 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger மதுமிதா

நன்று

உணர்வுபூர்வமாக அந்த நிகழ்வைத்,
தன் வாழ்வில் சந்தித்ததால், அந்த அனுபவம் உணர்ந்து
எழுதியுள்ளார் புஷ்பா தங்கதுரை

அவருக்கு நன்றி

வாழ்த்துகள் ஜெயந்தி

October 10, 2006 5:44 PM  

Post a Comment

<< Home